வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு!

Go down

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு! Empty பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு!

Post by தருண் Tue Oct 25, 2016 2:18 pm

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு! 8p1

நல்ல முதலீட்டின் முதல் முக்கிய அம்சமாக, அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் இருக்கிறது. அந்த வருமானம் பணவீக்க விகிதத்தைத் (அதாவது, விலைவாசி உயர்வை) தாண்டியதாக இருக்கவேண்டும். மேலும், முதலீடு மற்றும் வருமானத்துக்கு வரி குறைவாக இருக்கவேண்டும் அல்லது வரி இல்லாமல் இருக்கவேண்டும்.  

பணவீக்க விகிதம் பணத்தின் மதிப்பை எப்படிக் குறைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால்தான், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருகிற முதலீட்டில் ஏன் பணத்தை போடவேண்டும் என்பது விளங்கும்.

உதாரணத்துக்கு, இப்போது ஒருவரிடம் ரூ.1 லட்சம் இருக்கிறது. அதனை அவர் அப்படியே பீரோவில் பூட்டி பத்திரமாக வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பணவீக்க விகிதம் 7 சதவிகிதம் என்று வைத்துக் கொள்வோம். இந்த ரூ.1 லட்சத்தின் மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து கிட்டத்தட்ட கால்வாசியாக, அதாவது ரூ.25,842-ஆகக் குறைந்துவிடும். பணத்தின் மதிப்பைக் காப்பாற்றக்கூட நாம் முதலீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பணவீக்க பாதிப்பு...

20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்சத்தின் மதிப்பு)

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு! 8p2

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் நுகர்வோர் பணவீக்க விகிதம் சுமார் 7 சதவிகிதமாக உள்ளது. ஆனால், கல்வி, மருத்துவம் சார்ந்த பணவீக்கம் ஆண்டுக்கு 10-15 சதவிகிதமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஆண்டுதோறும் பணவீக்கம் உயர்ந்துகொண்டே வருகிறது என்று தெரிந்தும், அதனைத் தாண்டிய வருமானம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்யாமல், வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள் நம்மில் பலர். இனியும் அப்படி செய்தால் எதிர்காலத்தில் நமது பணத் தேவையில் பற்றாக்குறை ஏற்படும். அந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க நாம் கடன் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது கைவசம் இருக்கும் சொத்தினை விற்று, நிலைமையைச் சமாளிக்க வேண்டி இருக்கும்.

இன்றைக்கு பொறியியல் படிப்பு படிக்க ரூ.9 லட்சம் தேவை என்று வைத்துக் கொள்வோம். பணவீக்க விகிதம் 7 சதவிகிதமாக இருக்கும் எனில், அடுத்த 15 ஆண்டுகள் கழித்து ரூ.25 லட்சம் தேவைப்படும். இதுவே பணவீக்க விகிதம் 10% என்றால் ரூ.37 லட்சம் தேவைப்படும்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு! 8p4

அதேபோல, இன்றைக்கு குடும்பச் செலவுக்கு மாதம் ரூ.20,000 தேவை என்றால், ஆண்டுக்கு 7% பணவீக்க விகிதமாக இருக்கும்பட்சத்தில், 20 ஆண்டுகள் கழித்து, உங்களுக்கு ரூ.77,000 தேவைப்படும்.

இப்போது நமது வாழ்க்கை முறை (லைஃப் ஸ்டைல்) மிகவும் மாறி வருகிறது. ஒருவருக்கு இரண்டு ஸ்மார்ட் போன், ஒரு குடும்பத்துக்கு இரண்டு கார் என நம் தேவைகளும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் நம் தேவைகளையும் பயன்பாடுகளையும் கொஞ்சம்கூட குறைத்துக்கொள்ளாமல், இப்போதிருக்கிற மாதிரியே வசதியாக வாழவேண்டும் எனில், நம் முதலீடானது விலைவாசி உயர்வைத் தாண்டி வருமானம் தருவதாக இருக்கவேண்டும்.

பொதுவாக, முதலீட்டாளர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் (Conservative)

2. மிதமான ரிஸ்க் எடுப்பவர்கள் (Moderately Aggressive),

3. ரிக்ஸ்க்கை விரும்பி எடுப்பவர்கள் (Aggressive)

4. அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் (Very Aggressive)

நீங்கள் செய்யும் முதலீடு விலைவாசி உயர்வைத் தாண்டிய வருமானம் தரவேண்டும் எனில், உங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டு முறைகளைத் தேர்வு செய்வது அவசியம்.

காரணம், எல்லா முதலீடுகளும் ஒரே அளவில் வருமானம் தராது. ஒவ்வொரு முதலீட்டு முறையும் தரும் வருமானமானது அது செயல்படும் தன்மைக்கேற்ப வித்தியாசப்படும். அப்படியானால் நாம் எதில் முதலீடு செய்வது என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயற்கையே.

கடந்த இருபது வருடங்களில் எந்தெந்த முதலீடு எவ்வளவு லாபம் தந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே நாம் எதில் முதலீடு செய்யவேண்டும் என்பது தெளிவாகும். கடந்த காலத்தில் கிடைத்திருக்கும் வருமானம் எதிர்காலத்தில் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்றாலும், இந்த வருமானத்தை ஓர்  அடிப்படையாக வைத்து எந்த முதலீட்டைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம்.  

முதலீடு என்று எடுத்துக்கொண்டால், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்), எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி, சிட் ஃபண்ட், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள் என பல இருக்கின்றன. (இவற்றின் வருமானம்: பார்க்க அட்டவணை 1)

இந்த முதலீடுகளில் நீண்ட காலத்தில் பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள் போன்றவை கூட்டு வளர்ச்சி (Power of Compounding) என்கிற முறையில் பல்கிப் பெருகும், மேலும், வருமானத்துக்கு வரி கட்டவேண்டி இருக்காது. தங்கம், எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி போன்றவை கூட்டு வளர்ச்சி அடையாது என்பதோடு, விற்கும்போது மூலதன ஆதாய வரி கட்டவேண்டி வரும். இதனால், வருமானத்தில் ஒரு பகுதி வரியாகச் சென்றுவிடும் என்பதால், நிகர லாபம் குறைந்துவிடும்.

பல்வேறு முதலீடுகள் கடந்த 20 வருடங்களில் தந்த வருமானத்தைப் பார்ப்போம்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு! 8p71

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு! 8p8

1. தங்கம் மற்றும் வெள்ளி!

மக்கள் அதிகம் விரும்புவது தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள். திடீர் பணத் தேவைக்கு உடனே தங்க நகைக் கடன் வாங்கலாம். வெள்ளிப் பொருட்களை அடமானம் வைத்துக் கடன் வாங்குவது குறைவு. அதற்குப் பதிலாக எளிதில் விற்றுவிடுகிறார்கள். (ஆனால், தங்கத்தை மட்டும் நம்மவர்கள் விற்பதே இல்லை!) தங்கம் கடந்த 20 வருடங்களில் ஆண்டுக்கு சராசரியாக 8.93% வருமானம் கொடுத்திருக்கிறது.

2. ஆயுள் காப்பீடு பாலிசி!

முதிர்வின்போது குறிப்பிட்டத் தொகை திரும்பக் கிடைக்கிற மாதிரியான எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடுத் திட்டங்களை மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாக நினைத்து, நாம் நீண்ட காலமாக செய்துவருகிறோம். அது தவறு. இதில் கூட்டு வளர்ச்சி என்பது கிடையவே கிடையாது. ஏனென்றால், இதில் கட்டும் பிரீமியத்தில் ஒரு பகுதி ஆயுள் காப்பீடு கவரேஜுக்கு சென்றுவிடுகிறது. மேலும், ஏஜென்ட் கமிஷன், மற்ற முதலீடுகளைவிட வேறு அதிகம் என்பதால், முதலீட்டுக்கு செல்லும் தொகை குறைவுதான்.

இதுபோன்ற பாலிசிகள் கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 5 சதவிகிதம்தான் வருமானம் கொடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து பணத்தை வீணாக்குவதற்குப் பதில், குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு, மீதி பிரீமியத் தொகையை பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வந்தாலே நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

3. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்!

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் ஒரு காலத்தில் 12% எல்லாம் வட்டி கொடுத்தன. கடந்த 20 ஆண்டுகளில் ஃபிக்ஸட் டெபாசிட் சராசரியாக 8.77% வருமானம் கொடுத்திருக்கிறது. இப்போது இது 8 சதவிகித அளவுக்குக் குறைந்திருக்கிறது. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

4. பிஎஃப், பிபிஎஃப்!

இத்தகைய பிஎஃப், பிபிஎஃப் முதலீடுகள் எல்லாம் மாதச் சம்பளக்காரர்கள் மேற்கொள்வதாக இருக்கிறது. இதில் பிஎஃப் என்பது பணிக் காலம் வரைக்குமான திட்டமாகவும், பிபிஎஃப் 15 ஆண்டு கால திட்டமாக இருக்கிறது. இந்த முதலீட்டுக்கு ஒரு காலத்தில் 12% வருமானம்கூட கிடைத்தது. இப்போது பிஎஃப் வட்டி 8.8 சதவிகித அளவுக்கும், பிபிஎஃப் வட்டி 8 சதவிகித அளவுக்கும் குறைந்திருக்கிறது. இவை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஓய்வுக்கால முதலீட்டான இதில் பலர் இடையிடையே பண்டிகைச் செலவு, மகள் திருமணச் செலவு, மனை / வீடு வாங்குதல், எதிர்பாராத அவசரச் செலவு என ஒரு பகுதியை எடுத்துவிடுகிறார்கள். இதனால், கடைசி காலத்தில் செலவைச் சமாளிக்க தேவையான பணம் இல்லாமல் திணறிப் போகிறார்கள். அந்த வகையில் இந்தத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டை இடையில் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

5. மியூச்சுவல் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்டில் பல வகை இருக்கின்றன. ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானத்தை பங்கு சார்ந்த (ஈக்விட்டி) மியூச்சுவல் ஃபண்டுகள் தந்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் ஈக்விட்டி ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 22.5%, பேலன்ஸ்டு ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 21.09% வருமானம் கொடுத்திடுக்கின்றன.

(இந்த சராசரி வருமானத்தை நாம் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் ஈக்விட்டி ஃபண்டுகளின் (ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட், ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் புளுசிப் ஃபண்ட்..) மற்றும் பேலன்ஸ்டு ஃபணடுகளின் (பிர்லா சன்லைஃப் பேலன்ஸ்ட், ஹெச்டிஎஃப்சி புருடென்ஸ்..) வருமானத்தின் அடிப்படையில் கணக்கிட்டிருக்கிறோம்.)

ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறது என்று ஒதுங்கி பலர் முதலீடு செய்வதில்லை. ஒருவர் கடந்த 20 வருடங்களாக ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் ரூ.2,000 முதலீடு செய்து வந்து, அதற்கு சராசரி வருமானம் 22.5% கிடைத்திருந்தால், கிட்டத்தட்ட ரூ. 93 லட்சம் கிடைத்திருக்கும். இந்த வாய்ப்பை மிகச் சிலரே பயன்படுத்தி இருப்பார்கள்.

6. பங்குச் சந்தை!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தை ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் அளித்திருக்கிறது. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் பெற்று தரும் முதலீடுகளில் முக்கியமானதாக பங்குச் சந்தை இருக்கிறது. என்னால் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்து, அதிக ரிஸ்க் எடுக்க முடியாது என்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம். வருமானத்துக்கு வரி என்கிறபோது, ஓராண்டுக்கு மேற்பட்ட பங்கு மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுக்கு வருமான வரி இல்லை.

7. அஸெட் அலோகேஷன்!

முதலீட்டில் ரிஸ்க்கைப் பரவலாக்கவும், அதிக லாபமும் பெற உதவும் முக்கிய உத்தி இது. அதாவது, நம் முதலீடுகளைப் பிரித்து முதலீடு செய்வதாகும். இதனை ஆங்கிலத்தில் ‘அஸெட் அலோகேஷன்’ என்பார்கள். அதாவது, நாம் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள தொகையை தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்வதாகும். ஒருவர் 20 ஆண்டுகளுக்குமுன் (1996) ரூ.1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம். தங்கத்தில் 50% (ரூ.50,000) , ஃபிக்ஸட் டெபாசிட்டில் 20% (ரூ.20,000), ஃபேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டில் 10% (ரூ.10,000), ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் 20% (ரூ.20,000) முதலீடு செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த ஒரு லட்சம் ரூபாய் 20 ஆண்டுகளில் ரூ.20,65,603-ஆக அதிகரித்திருக்கும். இது 16.35% வளர்ச்சி. (பார்க்க அட்டவணை 2)

இதுவே மற்றொருவர் ரூ.1 லட்சத்தை தங்கத்தில் 20%, ஃபிக்ஸட் டெபாசிட்டில் 10%, ஃபேலன்ஸ்டு மியூச் சுவல் ஃபண்டில் 20%, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் 50% முதலீடு செய்கிறார். இந்த ஒரு லட்சம் ரூபாய் 20 ஆண்டுகளில் ரூ.41,38,465 சதவிகிதமாக அதிகரித்திருக்கும். இது 20.46% வளர்ச்சி. (பார்க்க அட்டவணை 3)

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் எஸ்ஐபி முறையில் ஒருவர் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறார் எனில், அவரது முதலீடு தங்கத்தில் 50% (ரூ.2,500), ஃபிக்ஸட் டெபாசிட்டில் 20% (ரூ.1,000), ஃபேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டில் 10% (ரூ.500), ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் 20% (ரூ.1,000) முதலீடு செய்வார். அவர் முதலீடு செய்த ரூ. 12 லட்சம், 20 ஆண்டு முடிவில் 89,26,932- ஆக அதிகரித்திருக்கும். இது 16.23% வளர்ச்சி. (பார்க்க அட்டவணை 4)

இதுவே மற்றொருவர் 5,000 ரூபாயை தங்கத்தில் 20%, ஃபிக்ஸட் டெபாசிட்டில் 10%, ஃபேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டில் 20%, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் 50% முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் முதலீடு செய்த 12 லட்சம் ரூபாய் 20 ஆண்டுகளில் ரூ.1,66,27,681-ஆக அதிகரித்திருக்கும். இது 20.44% வளர்ச்சி. (பார்க்க அட்டவணை 5)

அஸெட் அலோகேஷன்படி பார்த்தாலும், ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டு களில் அதிகம் செய்யப்பட்ட முதலீடுதான் அதிக லாபம் கொடுத்திருக்கிறது. நீண்ட காலத்தில் ஈக்விட்டி, ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள்தான் அதிக வருமானத்தைத் தந்திருக்கின்றன என்பது மேலே கண்ட உதாரணங்கள் மூலம் நிரூபணமாகி இருக்கின்றன. எதிர்காலத்திலும் இந்தியாவின் வளர்ச்சி உறுதிப்பட்டதாக இருப்பதால், இந்த முதலீட்டு லாபம் தொடர வாய்ப்பு இருக்கிறது.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்... பாதுகாப்பான முதலீடு, பக்கா வருமானம்!
» மாதம்தோறும் வருமானம் தரும் எம்.ஐ.பி திட்டங்கள்!
» பக்கா வருமானம் தரும் ஃப்ரான்சைஸ் பிசினஸ்! (Franchise-Business)
» மியூச்சுவல் ஃபண்ட்: பெஞ்ச்மார்க்கைவிட குறைந்த வருமானம் தரும் திட்டங்களை என்ன செய்வது?
» மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum